கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி, வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் கைது

கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி, வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் கைது
Updated on
1 min read

கோவில்பட்டி தனியார் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி, வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டி டி.எஸ்.பி. கலை கதிரவன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் மற்றும் போலீஸார் தனியார் விடுதிக்கு சென்று ரவுடி தங்கியிருந்த அறையை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

அறைக்குள் சென்றபோது 3 பேர் இருந்தனர். அங்கு 2 அரிவாள்கள் இருந்தன. ஆயுதங்களை பறிமுதல் போலீஸார் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள், சென்னையைச் சேர்ந்த சந்திரன் மகன் எண்ணூர் தனசேகரன் (39), சைதாப்பேட்டையைச் சேர்ந்த குணாளன் மகன் மதன்குமார் (32), வழக்கறிஞர் அருள்ராஜ் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் பட்டாசு வாங்க வந்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், எண்ணூர் தனசேகரன், மதன்குமார் ஆகியோர் மீது 10 கொலை வழக்குகள் உள்ளிட்ட 40 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும், எண்ணூர் தனசேகரன், மதன்குமார் மீது சென்னை நீதிமன்றத்தில் பிடி ஆணை உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 3 மணிக்கு மேல் கைது செய்யப்பட்ட 3 பேரை போலீஸார் மதுரை அழைத்துச் சென்றனர். அங்கு வந்த சென்னை போலீஸாரிடம் அவர்கள் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, போலீஸார் சுற்றி வளைத்ததை பார்த்த அவர்களது கார் ஓட்டுநர் சென்னையை சேர்ந்த அம்பேத்(30) என்பவர் தப்பியோடி விட்டார். காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in