Published : 05 Nov 2020 03:27 PM
Last Updated : 05 Nov 2020 03:27 PM

எல்.இ.டி விளக்கு திட்டத்தில் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை

தமிழகம் முழுவதும் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டதில் ரூ.500 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம், 14-வது நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.969.32 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.

இதில், அதிக விலைக்கு எல்.இ.டி. விளக்குகளைக் கொள்முதல் செய்ததன் மூலம் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் அனுப்பியிருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளித்துள்ளதாகக் கூறி, திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், “எனது புகாரை ஆளுநருக்கு அனுப்பி, அவரது ஒப்புதலைப் பெற்று, அமைச்சருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x