Last Updated : 05 Nov, 2020 01:34 PM

 

Published : 05 Nov 2020 01:34 PM
Last Updated : 05 Nov 2020 01:34 PM

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையீடு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நடப்பு கல்வி ஆண்டிலிருந்தே அமலுக்கு வருகிறது.

இந்த அவசர சட்டம் நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பொருந்தாது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லை. எனவே அவசர சட்டத்தின் பலனை தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர மனுவாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் வழக்கறிஞர் பினேகாஸ் காணொலி காட்சியில் இன்று ஆஜராகி வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து மனுவை நவ. 9-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x