Last Updated : 04 Nov, 2020 06:55 PM

 

Published : 04 Nov 2020 06:55 PM
Last Updated : 04 Nov 2020 06:55 PM

பட்டாசு உரிமம் வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய சார் ஆட்சியரின் கார் ஓட்டுநர் கைது: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடவடிக்கை

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற்றுத்தர ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் சார் ஆட்சியரின் ஓட்டுநரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அலவாய்க்கரைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன்(57). இவர் கீழக்கரை அண்ணாநகரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இக்கடையில் தீபாவளி பட்டாசு விற்க தற்காலிக உரிமம் பெற ஆட்சியரின் அறிவிப்பின்படி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு உரிமம் வழங்க வேண்டும். இதற்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர், கோட்ட தீயணைப்பு அலுவலர் போன்றோர் பரிந்துரை செய்து சான்றளிக்க வேண்டும். தனசேகரனின் விண்ணப்பத்தை பரிந்துரைக்க ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 10,000 லஞ்சம் கேட்டு பேரம் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை தரமுடியாது என தனசேகரன் தெரிவித்தும், அலுவலர்கள் விடாப்பிடியாக இருந்துள்ளனர்.

அதனால் தனசேகரன் நேற்று ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுரையின்படி தனக்கும், கீழக்கரையைச் சேர்ந்த மற்றொரு பட்டாசு வியாபாரி லட்சுமணன் என்பவருக்கும் தலா ரூ.10,000 தருவதாக தன்னிடம் பேரம் பேசிய சார் ஆட்சியரின் ஓட்டுநர் சிங்காரம்(53) என்பவருக்கு கைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலை லட்சுமணனின் ரூ. 10,000 மற்றும் தனது ரூ. 5,000 என ரூ. 15,000 லஞ்ச பணத்தை சார் ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் வைத்து ஓட்டுநர் சிங்காரத்திடம், தனசேகரன் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் ஓட்டுநர் சிங்காரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதனையடுத்து டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸார் ஓட்டுநர் சிங்காரம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலக பணியாளர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஓட்டுநர் சிங்காரம் பட்டாசு உரிமத்திற்கு பரிந்துரைக்க வாங்கிய ரூ. 15,000-ஐ, சார் ஆட்சியரின் உதவியாளர்(டபேதார்) செய்யது அப்துல்காதரிடம் வழங்குவேன், அவர் லஞ்சப்பணத்தை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பிரித்துக் கொடுப்பார் என தெரிவித்துள்ளார். அதனையடுத்து டபேதார் செய்யது அப்துல்காதரிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தனசேகரன் கூறியதாவது, நான் அரசின் விதிமுறைப்படி தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு விற்க திட்டமிட்டேன். ஆனால் உரிமம் வழங்க மாவட்ட வருவாய் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், கோட்ட தீயணைப்பு அலுவலகத்தின் அலுவலர்கள், அதிகாரிகள் ரூ. 10,000 முதல் 50,000 வரை லஞ்சம் கேட்கின்றனர். நாங்கள் விற்கும் பட்டாசு கூட அந்தத் தொகை பெறாது. ஆனால் அதிகாரிகளும், அலுவலர்களும் கேட்ட லஞ்சத்தால் மனம் வேதனையடைந்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தேன் எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x