

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு இல்லாததால் டிரான்ஸ்பார்ம்கள் சேதமடைந்து ஆபத்தானநிலையில் உள்ளன.
காளையார்கோவில் துணை மின்நிலையம் மூலம் காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், புலியடிதம்பம், ராணியூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணை மின்நிலையம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதனால் டிரான்ஸ்மார்கள் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்கள் முழுமையாக சேமடைந்து, பலத்த காற்று வீசினால் விழும்நிலையில் உள்ளது. பெரிய அளவில் விபத்து அபாயம் உள்ளதால் அங்கு பணிபுரியும் மின் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் டிரான்ஸ்பார்ம்கள் சேதம், பல ஆண்டுகளாக மாற்றப்படாத மின் தளவாடப் பொருட்களால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்களும் அவதி அடைந்து வருகின்றனர். துணை மின்நிலையத்தில் சேதமடைந்த தளவாடப் பொருட்களை மாற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மின் ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘ பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிப்பதில்லை. பழுதடைந்த மின்தளவாடப் பொருட்களையும் மாற்றுவதில்லை. டிரான்ஸ்பார்ம்கள் அமைந்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து பல மாதங்களாகியும் மாற்றவில்லை. ஆபத்தான நிலை உள்ளதால் ஊழியர்கள் அச்சத்தில் பணிபுரிகின்றனர்,’ என்று கூறினர்.