தூத்துக்குடியை இணைக்கும் 2 ரயில்களின் சேவை ரத்து: ரயில்வே அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மணியாச்சி சந்திப்பு முதல், தூத்துக்குடியிலிருந்து கோவை வழியாக சென்னை செல்லும் 2 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்குத் திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127/28) மற்றும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (22667) ஆகிய இரண்டு ரயில்களுக்கும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட்ட இணைப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, இதற்குப் பதிலாக, பாசஞ்சர் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியிலிருந்து, சென்னை மற்றும் கோவை செல்லும் பயணிகள் இதன் காரணமாக மிகவும் அல்லலுறுகின்றனர். அதிக நேரம் காத்திருப்பதோடு, அவர்கள் பயணங்களை மேற்கொள்வதில் இரண்டு ரயில்களைப் பிடிக்க வேண்டியதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்தப் புதிய முறையை உடனடியாகக் கைவிட்டு, பழைய முறைப்படி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குத் தூத்துக்குடியில் இருந்து இணைப்பு ரயில்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த நவ.2 அன்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்குக் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அமைச்சரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in