Published : 04 Nov 2020 03:03 PM
Last Updated : 04 Nov 2020 03:03 PM

சென்னையில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நடமாடும் அம்மா உணவகங்களைப் பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கிடும் விதமாக, அவ்வாகனங்களுக்கான சாவிகளை முதல்வர் பழனிசாமி இன்று 5 ஓட்டுநர்களுக்கு வழங்கி இயக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக 162 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 250 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 161 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 294 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

முதல்வர் தலைமையில் கடந்த 7.3.2018 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில்,"ஆண்டிப்பட்டி மற்றும் மயிலாடும்பாறை ஒன்றியங்களில் விடுபட்டுப் போன பகுதிகளுக்கு வைகை அணைக்குக் கீழ்ப் பகுதியிலிருந்து புதிய கூட்டுக் குடிநீர் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக 162 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 250 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வெலகலஹள்ளி மற்றும் 39 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், கீழமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த ராயக்கோட்டை மற்றும் 28 குடியிருப்புகளுக்கு 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு 9 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 42 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூடுதல் நீராதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 134 குடியிருப்புகளுக்கு 91 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் 324 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், 46 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 135 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 1153 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 6 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்ட அலுவலகக் கட்டிடம், நகராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கடடிடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்பு, ஆவடி, மாநகராட்சியில் 197 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 MLD சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 255 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 21 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புடன் புனரமைக்கப்பட்ட 31 நீர்நிலைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் புனரமைக்கப்பட்ட 117 சமுதாயக் கிணறுகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் புனரமைக்கப்பட்ட 174 சமுதாயக் கிணறுகள் என மொத்தம் 291 சமுதாயக் கிணறுகளை இன்று முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை, திருவிக நகர், ஸ்டிரஹான்ஸ் சாலையில் 13 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகக் கட்டிடம்; துரைப்பாக்கம், ராஜீவ் காந்தி சாலையில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், தேனாம்பேட்டை, கே.பி. தாசன் சாலையில் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு காப்பகக் கட்டிடம்; வில்லிவாக்கம், சிட்கோ நகர், 4-வது பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, என மொத்தம் 39 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நடமாடும் அம்மா உணவகங்கள், 4 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குப்பைகளை உறிஞ்சி அகற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 15 சிறியவகை வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கிடும் விதமாக, அவ்வாகனங்களுக்கான சாவிகளை இன்று 5 ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x