

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை வகித்தார். நகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்தி, துறைரிதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் திருமலைச்செல்வி, துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் கூறும்போது, “சங்கரன்கோவில் நகராட்சி மூலம் வியாபாரிகளிடம் வசூல் செய்வதற்கான டெண்டர் காலம் பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பின்னர் நகராட்சி ஊழியர்கள் தான் வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால் சில தனி நபர்கள் சொந்தமாக ரசீது அடித்து தினசரி வசூல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி போன்ற மாநகராட்சி பகுதிகளில் கூட ஒரு வருடத்துக்கு மிக குறைந்த அளவு தொகையே சாலை ஓர வியாபாரிகளிடம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சங்கரன்கோவில் நகராட்சி மிக அதிக அளவாக நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதை தட்டி கேட்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருந்தது அவர்களும் துணை போய்விட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது.
எனவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
சில தினங்களுக்குள் நகராட்சி மண்டல இயக்குநர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் சங்கரன்கோவில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.