Published : 03 Nov 2020 07:33 PM
Last Updated : 03 Nov 2020 07:33 PM

அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தமிழகத்தில்தான்: அரசு மருத்துவர்கள் சங்கம் வேதனை

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

சுகாதாரத் துறை செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் பிள்ளை இன்று வெளியிட்ட அறிக்கை:

''அரசின் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று ஒரு வருடமே முடிவடையும் நிலையிலும், ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றப்படாத வேதனையில் அரசு மருத்துவர்கள் முதல்வருக்கு விடுக்கும் வேண்டுகோள்:

1) தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் வியூகத்தைப் பின்பற்ற வேண்டும் என ICMR நிறுவனமே தெரிவிக்கும் வண்ணம், இங்கு கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

2) கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்துள்ளதோடு, புதிதாகத் தொற்று ஏற்படுவதையும் குறைத்துள்ளோம். குணமடைந்தோர் எண்ணிக்கையும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.

3) கரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே அரசு மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதற்கிடையே தொற்று ஏற்படும் மருத்துவர்கள் சிகிச்சை, குவாரண்டைன் எனச் செல்வதால், பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கரோனாவால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததோடு, பணிச்சுமையும் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்களுக்கு உரிய ஊதியமும் தரப்படவில்லை என்பதுதான் வேதனையளிக்கிறது.

4) உலகத்தையே புரட்டிப் போட்டுள்ள இந்தக் கொடூரமான கரோனாவிடமிருந்து, தமிழகத்தில் இருக்கின்ற 18 ஆயிரம் அரசு மருத்துவர்களை வைத்தே, மக்களைக் காப்பாற்றி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 9 ஆயிரம் கோடி உள்பட கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு தாராளமாகச் செய்யப்படுகிறது.

5) கரோனா பாதிப்பால் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணி செய்து வரும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை, அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.

டாக்டர் பெருமாள் பிள்ளை

6) கரோனா சமயத்தில்:

ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 2019 மார்ச் முதல் செப்டம்பர் வரை 6,573 பிரசவங்கள் (4,235 சுகப் பிரசவங்கள், 2,338 சிசேரியன்) நடந்துள்ளன. 2020இல் இதே காலத்தில் 6,846 பிரசவங்கள் (3,886 சுகப் பிரசவங்கள், 2,960 சிசேரியன்) நடந்துள்ளன.

இங்கு 24 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 டாக்டர்கள் உள்ளனர். அதிலும் ஒருவர் மகப்பேறு விடுமுறையில் உள்ளார். 7 பேராசிரியர்கள் மற்றும் 2 இணைப் பேராசிரியர்கள் உள்ளனர்.

கே.எம்.சி மருத்துவமனையில் மார்ச் முதல் செப்டம்பர் வரை இங்கு 4,467 பிரசவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 400 கர்ப்பிணிகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனையில் 2,300 கரோனா நோயாளிகளுக்கு இதய நோய் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்( ICH)ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சையளித்துக் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா தொற்று இல்லாத குழந்தைகளுக்கு மேஜர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ICHக்கு நேரில் வந்து, நம் சுகாதாரத் துறைச் செயலாளர் மருத்துவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் 5,249 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று ஏற்பட்ட 414 நோயாளிகளுக்கும் டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

7) சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்த படி ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் கடந்த ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டோம். அதுவும் போராட்டத்தை வாபஸ் பெற்றால் அரசு தாயுள்ளத்தோடு, மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்ற முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் ஒரு வருடமே முடிந்த நிலையிலும், கோரிக்கை நிறைவேற்றப்படாதது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு வருத்தமளிக்கிறது.

8) சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25-வது இடத்தில் உள்ள பிஹார் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எல்லாம் மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால், முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது.

9) தற்போது கர்நாடகாவில் மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடங்கும் முன்னரே, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மருத்துவர்கள் 3 வருடத்திற்கும் மேல் போராடியதோடு, மூன்று தடவை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துள்ளோம். மேலும் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும் அரசு மனம் இரங்கவில்லை.

10) எனவே, தமிழகத்திற்குத் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே சிறந்த ஊதியம்
அல்லது அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு அல்லது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தருவதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x