

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் கருகின. மாடுகளை விவசாயிகள் வயல்களில் மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாராசரி அளவை எட்டியது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் மானாவாரி பயிராக மக்காச்சோள பயிரை அதிகளவில் பயிரிட்டனர். தென் மேற்கு பருவமழையால் ஒரு மாதம் செழித்து வளர்ந்த மக்காச்சோள பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
அக்டோபர் தொடக்கத்திலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கியிருந்தால் பயிர்களை காப்பாற்றியிருக்கமுடியும். ஆனால் இதுவரை வடகிழக்கு பருவமழை பெய்யும் அறிகுறியே இல்லாதிலை காணப்படுகிறது. ஒரு மாதமாக தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகத்தொடங்கியது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் கருகிய நிலையில் காணப்படுகிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், சீவல்சரகு, வண்ணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் கருகியதால், வயல்களில் மாடுகளை மேயவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்த்ததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 வரை அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.
கடந்த ஆண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் வருவாயை இழந்தோம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும், என்றனர்.