பாளை.யில் பாண்டியர்களின் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் மனு

பாளை.யில் பாண்டியர்களின் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் மனு
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் சிதிலமடைந்து வரும் பாண்டியர்களின் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் அனுப்பியுள்ள மனு:

திருநெல்வேலியில் 8-ம் ஆண்டு நூற்றாண்டில் பாண்டியர் ஆண்ட காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அதன்பின் பாளையக்காரர்களும், பின்னர் ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி வந்தனர்.

இங்குதான் ஊமைத்துரையை சிறை வைத்துள்ளனர். பல வரலாறு கொண்டுள்ள கோட்டையாக இது உள்ளது. அந்தகால பாண்டியர்களின் ஆட்சியின் அடையாளமாக இன்றைய மேடை போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள கோட்டை பகுதிதான் கோட்டையின் அடையாளமாக இருக்கிறது.

மற்றொரு அடையாளம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை பகுதி, மற்றொரு பகுதி பாளையங்கோட்டையில் இருக்கும் அருங்காட்சியகமாகும்.

ஆனால் எல்லாருக்கும் தெரிந்த கோட்டை பகுதியாக இருப்பது மேடை போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதிதான். இந்த கோட்டை பகுதி தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி மேடை போலீஸ் ஸ்டேஷன் பகுதியான, பாண்டியர்களின் கோட்டையின் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு இந்த தொன்மை அடையாளத்தை பாதுகாத்து வழங்க வேண்டும்.

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பகுதியை புனரமைத்து பள்ளி மாணவ, மாணவியர் வந்து பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in