Published : 03 Nov 2020 01:50 PM
Last Updated : 03 Nov 2020 01:50 PM

பள்ளிகளைத் திறந்து மாணவர்களின் உயிரோடு விளையாடுவதா?- தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையையும், கரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (நவ. 3) தன் ட்விட்டர் பக்கத்தில், "பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையையும், கரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று பள்ளிகளைத் திறந்து மாணவ, மாணவிகளின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்காது.

'தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதே நாளில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார் என்றால் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது?

அடுத்த சில மணி நேரங்களில் உகந்த சூழல் ஏற்பட்டுவிட்டதா? மிக முக்கியமான பிரச்சினையில் கூட ஏன் இவ்வளவு குழப்பம்? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் இதனைப் புரிந்து நடந்து கொள்வார்களா?" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x