Published : 03 Nov 2020 01:11 PM
Last Updated : 03 Nov 2020 01:11 PM

ஓராண்டில் 40 பேருக்கு ஒரு கோடி ரூபாய் மருத்துவ உதவி நிதி; சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

சென்னை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து கடந்த (2019-2020) ஓராண்டில் மட்டும் 40 நபர்களுக்கு 1 கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவ நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள தகவல்:

''கடந்த நிதியாண்டில் (2019-2020) பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கோரி பொதுமக்களிடம் இருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 40 நபர்களுக்கு ரூ.1,02,50,000 (ஒரு கோடியே இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) மருத்துவ நிவாரண உதவித்தொகை இதுவரை கிடைத்துள்ளது. இன்னும் 34 நபர்களுக்கு நிவாரண நிதி வரவேண்டியுள்ளது.

இதுவரை பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட 36 நபர்களுக்கு 97,75,000 ரூபாயும், இதய அறுவை சிகிச்சை தொடர்பாக 4 நபர்களுக்கு ரூ.4,75,000 நிவாரண நிதியாகவும் கிடைத்துள்ளது. ஓராண்டுக்குள் ஒரு கோடி ரூபாய் பெற்றுத் தருவது என்ற இலக்கோடு செயல்பட்டோம். கரோனா காலமாதலால் இலக்கை அடைய மூன்றுமாத காலம் கூடுதலாக ஆகியுள்ளது''.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x