இருட்டறையில் அடைத்துக் கொலை செய்ய முயற்சி: நீதிபதியிடம் சயான், மனோஜ் புகார்

இருட்டறையில் அடைத்துக் கொலை செய்ய முயற்சி: நீதிபதியிடம் சயான், மனோஜ் புகார்
Updated on
1 min read

சிறை அதிகாரிகள் முறையாக உணவு வழங்காமல் இருட்டறையில் அடைத்துத் தங்களைக் கொலை செய்ய முயற்சி செய்வதாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் நீதிபதியிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று (நவ.2) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும், குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ், ''கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களுக்குக் கடந்த 28-ம் தேதி முதல் சிறை அதிகாரிகள் முறையாக உணவு வழங்கவில்லை. இருட்டறையில் அடைத்துக் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்'' என்று பொறுப்பு நீதிபதி அருணாசலத்திடம் புகார் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in