

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் திருநீறு பூச மறுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "1968-ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில் அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதை செலுத்தியதை அவமதிப்பது நாகரிகமாக இருக்காது என்று பெரியார் கூறினார். திராவிடர் கழகம் வழியில் வந்த கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் ஒன்று நாத்திகராக இருக்க வேண்டும் அல்லது ஆத்திகராக இருக்க வேண்டும்.
தேர்தல் நேரங்களில் எடுக்கக்கூடிய ஆரத்தி மற்றும் வைக்கக்கூடிய திருநீறுகளையும், இஸ்லாமியர்கள் அணிவிக்கும் புனிதமான குல்லாவையும் அவர் ஏற்கும்நிலையில், திருநீறை உதாசீனப்படுத்தி முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்திவிட்டார். அதற்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சடங்கு உள்ளதை ஏற்றுக் கொள்பவராகவும், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்பவராகவும் ஸ்டாலின் இருக்க வேண்டும்" என்றார்.