Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

ஆளவந்தார் அறக்கட்டளை நில சர்வே எண்களில் குளறுபடிகள்; ஆவணங்களை சீரமைத்து அளவீடு செய்ய மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவருக்கு, பட்டிபுலம், நெம்மேலி, கிருஷ்ணங்காரணை, கோவளம், சூளேரிக்காடு, சாலுவான் குப்பம் ஆகிய பகுதிகளில் சொந்தமாக இருந்த 1,550 ஏக்கர் நிலத்தை திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் மற்றும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில்களுக்கு கைங்கர்யம் செய்வதற்காக கடந்த 1914-ம் ஆண்டு கோயில்கள் பெயரில் உயில் எழுதிவைத்தார்.

இதையடுத்து, மேற்கண்ட நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு மேற்கண்ட கோயில்களில் ஆண்டு பிரம்மோற்சவம் மற்றும் அன்னதானம் என பல்வேறு கைங்கர்யங்கள் கட்டளையாக செய்யப்பட்டு வருகின்றன. இதில், 40 ஏக்கர் நிலம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

குத்தகை நிலங்கள் போக மீதமுள்ள நிலங்கள் அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை, வருவாய்த் துறை அதிகாரிகள் தன்னிச்சையாக மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் முன்னிலையில் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாக அதிகாரிகளுடன், நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை வருவாய்த் துறை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் பட்டிபுலம் கிராமத்தில் பலருக்கு கூட்டு பட்டாவாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், பல்வேறு சர்வே எண்களில் குளறுபடிகள் உள்ளன. இதன்படி நிலங்களை அளவீடு செய்தால் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்படும்.

கூட்டு பட்டா பெற்ற நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நபர்கள் செல்வந்தர்களாகவும், அரசியல் பின்புலம் படைத்தவர்களாக உள்ளதால் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே, ஆட்சியர் தலையிட்டு ஆவணங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்து அளவீடு செய்ய வேண்டும் என அறக்கட்டளை மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x