Last Updated : 01 Nov, 2020 03:47 PM

 

Published : 01 Nov 2020 03:47 PM
Last Updated : 01 Nov 2020 03:47 PM

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இன்று (நவ. 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் சம்சுல்லாஹா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் இ.முகம்மது, பொருளாளர் அப்துல் ரகீம், துணைத் தலைவர் அப்துல் ரகுமான், துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மாநிலச் செயலாளர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் பாரூக், யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், "கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டை உயர்த்துவதாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA) மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகிய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள் பல அணிகளில் இருந்து, எதிர் அணியுடன் போட்டியிடுவதால் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு நேரிடுவதை உணர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே அணியில் இருந்து அரசியல் கட்சிகளிடம் அதிக தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.

அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டில் மதப் பிரச்சினைகளைத் தூண்டும் வகையில் செயல்படும் சங்பரிவார் அமைப்புகளைக் கண்டிக்கிறோம். மேலும், தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு அவதூறுகளையும், முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வரும் சங்பரிவார் அமைப்புகள் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் வாக்குப் பதிவு நடத்துவதைக் கைவிட்டு வாக்குச்சீட்டில் நடத்த வேண்டும்.

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி அதிக இடங்களில் முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். அதேபோல், கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கும் கூட்டணித் தலைமை உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x