

அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சர் துரைக்கண்ணு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் (அக். 31) சிகிச்சை பலனளிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 1) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
"வேளாண்துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு மறைவெய்திய அதிர்ச்சி செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவுக்குத் திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் மூன்று முறை பாபநாசம் சட்டபேரவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று, 2016-ல் வேளாண்துறை அமைச்சராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பதவியேற்றவர் துரைக்கண்ணு.
சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும், துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அதிமுகவுக்கும் சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.
பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக அமைச்சர்களுக்கும், முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.