Published : 27 Oct 2015 08:36 AM
Last Updated : 27 Oct 2015 08:36 AM

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் உயிர் பிழைத்தனர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிர் பிழைத்தனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் வரதன் (60). இவரது மனைவி பிரபா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 23-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் போரூரில் உள்ள  ராமச்சந்திரா மருத்துவமனையில் வரதன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

சிறுநீரகங்கள், கல்லீரல்

இதையடுத்து கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவரது மனைவி பிரபா டாக்டர்களிடம் தெரிவித்தார். அதன்படி டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வரதனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் இதய வால்வுகளை எடுத்தனர்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விருதுநகரைச் சேர்ந்த 66 வயதானவருக்கு கல்லீரல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த 52 வயதான மற்றும் 47 வயதுடைய இரு பெண்களுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் முகமது ரெய்லா குழுவினரும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் கே.நடராஜன் குழுவினரும் வெற்றிகரமாக செய்தனர். உறுப்புகளைப் பெற்ற 3 பேரும் குணமடைந்து வருகின்றனர். இதய வால்வுகள், கண்களை தேவையானவர்களுக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x