Published : 01 Nov 2020 01:04 AM
Last Updated : 01 Nov 2020 01:04 AM

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இரவு காலமானார்.

அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அமைச்சர் துரைக்கண்ணுவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும், அவர் பல்வேறு இணைநோய்கள் பாதிப்பில் உள்ளதும், சி.டி.ஸ்கேன் சோதனையில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததாகவும், அதனால் அவர் எக்மோ கருவி உதவியுடன் அதிகபட்சக் கவனிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்த நிலையில் சனிக்கிழமை (அக்.31) காலை அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அவரது உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாகவும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை (31/10) இரவு 11.10 மணி அளவில் துரைக்கண்ணு காலமானார். அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வருத்தத்துடன் உறுதி செய்தது.

அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எளிமையானவர். அமைச்சருக்குரிய ஆடம்பரம் எதையுயும் தன்னை அணுகவிடாமல் எளிய மனிதராக வாழ்ந்தவர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதன்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2011, 2016 ஆம் ஆண்டு என 3 முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அவரை வேளாண்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மனைவியும் 6 பிள்ளைகளும் உள்ளனர்.

முதல்வர், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x