திமுகவின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை: பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

திமுகவின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை: பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி
Updated on
1 min read

பெண்கள், தலித் மக்களுக்கு எதிரானவர்களை பாதுகாக்கும் திமுகவின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை நடத்துகிறோம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசும்பொன் ஒரு கோவில். சித்தர் பீடம். அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆனால் திமுக தலைவர் பசும்பொன்னில் கொடுத்த விபூதியை தட்டிவிட்டுள்ளார். அவரது செயல் அனைவரையும் வேதனைப்படுத்தியுள்ளது. இதற்காக ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண்கள் மற்றும் தலித் மக்களையும் வேலமாகப் பேசவதை பாதுகாக்கிறார் ஸ்டாலின். அவரின் போலி சமூக நீதியை மக்கள் புரிந்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மக்கள் அவருக்கு பதிலடி கொடுப்பார்கள். தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னால் திமுக இருக்கிறது. இதில் தொடர்புடையவர்களுக்க திமுக சட்டப்பிரிவு சட்ட உதவிகளை செய்து வருகிறது. திமுகவின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை நடத்துகிறோம்.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. யாத்திரையால் ஆதரவு மேலும் அதிகரிக்கும். வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. இதனால் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்கின்றனர். தடை விதித்தாலும் வேல் யாத்திரை நடைபெறும். வேல் யாத்திரை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மனு தர்மம் என ஒன்று இல்லை. அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின்படியே இந்தியா இயங்கி வருகிறது. ஆனால் இல்லாத மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது. ஆர்எஸ்எஸ் கூட பல நேரங்களில் மனு தர்மத்தை எதிர்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, புறநகர் மாவட்டத் தலைவர் மகா சசீந்திரன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in