Last Updated : 31 Oct, 2020 04:34 PM

 

Published : 31 Oct 2020 04:34 PM
Last Updated : 31 Oct 2020 04:34 PM

என் மீது சிபிஐயிடம் 10 ஊழல் புகார்களை கிரண்பேடி அனுப்பியுள்ளார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 

தன் மீது சிபிஐயிடம் 10 ஊழல் புகார்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ளார் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் மற்றும் இந்திரா காந்தி நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் சத், புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் படேல், இந்திரா காந்தி ஆகியோரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

"புதுச்சேரியில் தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை சாடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வியூகம் அமைக்க வேண்டும். காங்கிரஸ்-திமுக கூட்டணி 2016-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி போன்றவை நம்முடன் கூட்டணியில் இருக்கின்றனர்.

தேர்தல் வருவதற்கு 6 மாத காலம் உள்ளது. தூங்கி கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது வெளியே வர ஆரம்பித்துள்ளனர். நான்கரை ஆண்டுகளாக மக்களை பற்றி சிந்திக்காமல், மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்துக்கிற கூட்டத்தை சாடாமல், ஆட்சியில் குறையிருந்தால் அதனை சுட்டிக்காட்டாத எதிர்க்கட்சி புதுச்சேரியில் உள்ளது.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி வேலையை செய்கிறார். ஆனால், புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சி எதிரிகட்சி வேலையை பார்க்கிறது. கிரண்பேடிதான் நமக்கு எதிர்க்கட்சி. புதுச்சேரியில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு புதுச்சேரி மாநிலத்தைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

மாநில வளர்ச்சி பற்றி அவர்களுக்குக் கவலையும் கிடையாது. ஒருபுறம் மத்திய அரசு நமக்குக் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. மற்றொருபுறம் வருகின்ற திட்டங்களைத் தடை போடுவதற்காக கிரண்பேடி இருந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறோம்.

புதுச்சேரியில் தற்போது புதிதாக சுமார் 450 காவலர்களைத் தேர்வு செய்ய இருக்கிறோம். இதற்கான தேர்வு வரும் நவம்பர் 4-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த தேர்வு செய்யும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கரோனா தொற்று காரணமாக அவர்களால் வர முடியவில்லை.

இதனால் நம்முடைய காவல் துறையினரே தேர்வு செய்வதற்கான உத்தரவை கிரண்பேடியிடம் அனுப்பினோம். ஆனால், கிரண்பேடி ஐதராபாத் தேர்வு நிறுவனத்தை அழைக்கச் சொல்லி, நம்முடைய உத்தரவைத் தடை செய்கிறார். குறிப்பாக, 22 வயதிலிருந்து 24 வயதாக உயர்த்திய காரணத்திற்காகப் பல கோணங்களில் அவர் இந்த காவலர் தேர்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்கிறார்.

நாம் ஒரு போராட்டத்துக்கு நடுவே ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டத்துக்கும் தடை விதிப்பதால் எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. தினமும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த அனைத்து சூழலுக்கும் இடையே இந்தியாவில் உள்ள 17 சிறிய மாநிலங்களில் சிறப்பாக நிர்வாகம் கொடுக்கின்ற சிறந்த மாநிலமாகப் புதுச்சேரி இரண்டாவதாகத் தேர்வு செய்துள்ளனர்.

எங்களின் கையை கட்டிப்போடாமல் இருந்தால் புதுச்சேரி மாநிலத்தில் நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்திருப்போம். என் மேல் கொண்ட பாசத்தால் கிரண்பேடி இதுவரை சிபிஐ-யிடம் முதல்வர் ஊழல் செய்துவிட்டார் என்று 10 மனுவை விசாரணைக்காக அனுப்பியுள்ளார். நான்கு வேட்டியும், நான்கு சட்டையும் எடுத்துக்கொண்டு போகத் தயாராக இருக்கிறேன்.

2021-ல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்ற சூளுரையை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்".

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x