Published : 31 Oct 2020 01:47 PM
Last Updated : 31 Oct 2020 01:47 PM

கருணாநிதி சிலை திறக்க அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில்  வழக்கு

பிரதிநிதித்துவ படம்

சென்னை

தனக்கு சொந்தமான நிலத்தில் தனது கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக் கோரி திமுக பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், “மாதவரத்தை அடுத்த கொசப்பூரில் எனக்கு சொந்தமான நிலத்தில் திமுக-வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் மார்பளவு வெங்கலச் சிலையை அமைத்துள்ளேன். அதனை தற்போதைய தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிட்டிருந்தேன்.

திமுக தலைவராகவும், முதல்வராகவும் கருணாநிதி சமூகத்தில் நிகழ்ந்த சாதனைகளையும், வளர்ச்சிகளையும் கொண்டாடும் வகையில் திமுக-வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில், எங்களுடைய பாசத்தலைவனுக்கு தன் சொந்த இடத்தில் அமைத்துள்ள வெண்கலச் சிலையை அமைத்துள்ளேன்.

சிலை திறப்பு விழா நடத்த அனுமதி கோரி ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் மனு அனுப்பியும் காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே என் மனுவை பரிசீலித்து திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபது, ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சிலைகளை வைக்கலாம் என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x