Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

கட்சியில் வாரிசுக்கு மகுடம் சூட்ட காய் நகர்த்தும் முன்னாள் அமைச்சர்

மகனின் அரசியல் வாழ்க்கையை பலமாக அமைத்துக் கொடுக்கும் முனைப்புடன் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

திமுகவில் உள்ள முன்னணி தலைவர்கள், தங்களது வாரிசுக்கு எம்எல்ஏ மற்றும் எம்பி பதவியை மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றனர். அதே நேரத்தில், திமுக தலைவர்மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான வர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தனது வாரிசுக்கு கட்சியில் மகுடம் சூட்ட காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அடித்தள கட்டமைப்பை பலமாக அமைத்துக் கொடுக்க, வாரிசை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் எ.வ.வேலு.

இது குறித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்கள் கூறும் போது, “திமுகவில் உள்ள முன்னணி தலைவர்கள், தங்களது வாரிசு களை எம்எல்ஏ மற்றும் எம்பி பதவிகள் மூலம் அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், எ.வ.வேலு, தனது மகனான மருத்துவர் எ.வ.வே.கம்பனை, முழு நேர அரசியல்வாதியாக கள மிறக்கி, அதன் பிறகு எம்எல்ஏ, எம்பி பதவியை பெற முடிவு செய்துள்ளார்.

இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் என தலைமை அறிவிக்காத ஒரு பொறுப்பை தனது மகனுக்கு ஏற்படுத்தி கொடுத்து அரசியல் பயிற்சி அளித்து வருகிறார். அந்த தொகுதியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள், களப் போராட்டம், நிர்வாகிகள் குடும்பத்தின் சுப மற்றும் துக்க நிகழ்வுகள், கரோனா நிவாரண உதவிகள் என அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க செய்துள்ளார்.

இதன்மூலம், கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிளை நிர்வாகிகளையும், அவர்களது பெயரை குறிப்பிட்டு அழைத்து நலம் விசாரிக்கும் அளவுக்கு கம்பன் முன்னேற்றம் அடைந்துள்ளார். இந்த தொகுதியைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எ.வ.கம்பனின் செயல்பாடுகளை விரிவுபடுத்த எ.வ.வேலு திட்டமிட்டுள்ளார்.

அரசியல் நுணுக்கங்கள்

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பழகும்போது, நல்லவர்கள் யார், துரோகிகள் யார், அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள், அதனை எதிர்கொள்வது எப்படி போன்ற அரசியல் நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான், உட்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியும் என கருதுகிறார். மேலும், மக்கள் குறை களுக்காக அதிகாரிகளை அணுகுவதற்கான பாலத்தை அமைத்துள்ளார். கட்சியில் மூத்த நிர் வாகிகள் பலரை ஓரங்கட்டி விட்டு, ஆட்சியரை சந்தித்து மக்களின் பிரச்சினை தொடர்பாக மனுக்களை கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கலசப்பாக்கம் தொகுதியை போல், மற்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர் நியமனம் இல்லை என்ற கேள்வி உட்கட்சியில் எழுந்தது. இதையடுத்து, மாநில மருத்துவரணி துணைத் தலைவர் பதவியை தலைமையிடம் கேட்டு பெற்றுக் கொடுத்துள்ளார். மாநில பொருளாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தவரை சமாதானப்படுத்த, அவரது மகனுக்கு மாநில அளவிலான பதவியை தலைமை வழங்கி உள்ளது. இருப்பினும், மாநில பொறுப்புக்கான முயற்சியில் இருந்து எ.வ.வேலு பின்வாங்க வில்லை, தொடர்ந்து முனைப்புடன் செயல்படுகிறார். அவருக்கு மாநில பொறுப்பு கிடைக்கும் போது, திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக செய லாளர் பதவியில் இருந்து விலக நேரிடும். அப்போது, அந்த பதவியில் மகனை அமர வைத்து மகுடம் சூட்ட விரும்புகிறார். இதற்கு, உட்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பும். அதனை எதிர்கொண்டு சமாளிக்கவும், அவர் தயாராகவே உள்ளார்.

திமுகவில் மிகப்பெரிய பதவியான மாவட்டச் செயலாளர் பதவிக்கு தேவையான தகுதியை வளர்த்துக் கொள்வதற்காகவே, தனது மகனை களப்பணியில் ஈடுபட வைத்துள்ளளார். மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றுவிட்டால், எம்பி அல்லது எம்எல்ஏ சீட்களை எளிதாக பெறலாம். மேலும், இந்த பதவிகள் எல்லாம் 5 ஆண்டுகள் வரைதான். ஆனால்,மாவட்டச் செயலாளர் பதவியானது நீண்ட காலம் நீடிக்கும். சாணக்கியனாக செயல்பட்டால் ஆயுள் வரை நீடிக்கலாம்.

எனவேதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட, ஸ்டாலின் கேட்டுக்கொண்டும் திருவண்ணாமலை தொகுதியில் மகனை களம் இறக்கவில்லை. எனது மகனுக்கு எந்தநேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொடுப்பேன்என கூறி வருகிறார். தொலைநோக்கு சிந்தனையுடன் நிதானமாக காய்களை நகர்த்துகிறார். அவரது மனக்கணக்கு வெற்றி பெறுமா? என்பதை பொறுத் திருந்து பார்க்கலாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x