Last Updated : 30 Oct, 2020 07:36 PM

 

Published : 30 Oct 2020 07:36 PM
Last Updated : 30 Oct 2020 07:36 PM

கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களைப் போல் தமிழகத்தில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை கல்வித்தகுதியை பார்க்காமல் உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் மதுரேசன். இவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாற்றுத்திறன் வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 90 பதக்கம் பெற்றுள்ளார். இவர் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பொதுவான விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது போல் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு முன்னுரிமை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் முத்துகீதையன் வாதிடுகையில், மனுதாரர் 9-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இதனால் அவர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

வழக்கறிஞர் கே.சாமிதுரை வாதிடுகையில், தமிழக அரசு மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை ரூ.15 லட்சம் (தங்கப்பதக்கம்), ரூ.10 லட்சம் (வெள்ளி பதக்கம்), ரூ.5 லட்சம் (வெண்கலம்) என உயர்த்தி 2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த அரசாணை அடிப்படையில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசு தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் வெற்றவர்களுக்கு ரூ. 3 லட்சம், வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் வழங்குகிறது. இது மிகவும் குறைந்த தொகையாகும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பாக்கிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் 12-ம் வகுப்பு தான் படித்துள்ளார். அவர் பஞ்சாப்பில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ், உயர் நிலைக் கல்வியை தாண்டவில்லை. அவர் ரிசர்வ் வங்கி உதவி மேலாளாக நியமிக்கப்பட்டார்.

மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில், மத்திய அரசும் கூட விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரித்து உயர் பதவிகளில் அவர்களை நியமனம் செய்கிறது. இதேபோல் தமிழகத்திலும் விளையாட்டு வீரர்களை உயர் பதவிகளில் நியமிக்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை.
இந்த வழக்கில் மத்திய அரசு அதிகாரிகள் 10.11.2020-ல் பதிலளிக்க வேண்டும். தவறினால் மத்திய அரசு அதிகாரிகள் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மத்திய அரசு மாற்றுத்திறன் விளையாட்டுகளில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்துவது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழக அரசு மனுதாரருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்தி 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

பின்னர் விசாரணையை நவ. 10-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x