வட மாவட்டங்களில் மழை தொடரும்: சென்னையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வட மாவட்டங்களில் மழை தொடரும்: சென்னையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

இதனால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 10 செ.மீ., காட்டுப்பாக்கத்தில் 8 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 8 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் மற்றும் தென் தமிழகத் தில் ஒரு சில இடங்களிலும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி முதல் தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in