Published : 30 Oct 2020 03:13 PM
Last Updated : 30 Oct 2020 03:13 PM

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி; வென்றது சமூக நீதி: ஸ்டாலின் கருத்து

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (அக்.29) பிறப்பித்தது. இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், அவசரநிலை கருதி தமிழக அரசு தனக்கான நிர்வாக அதிகாரத்தின்கீழ் கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை வெளியிட்டது.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்த 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (அக். 30) ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம்

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

திமுக நடத்திய போராட்டமும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூக நீதி! எப்போதும் வெல்லும் சமூக நீதி!!" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x