Published : 30 Oct 2020 12:28 PM
Last Updated : 30 Oct 2020 12:28 PM

தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை: ஸ்டாலின் பங்கேற்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மதுரையில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:

“பசும்பொன் தேவரின் 113-வது ஜெயந்தியை முன்னிட்டும், 58-வது குரு பூஜையை முன்னிட்டும் பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறேன்.

நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் தமிழ் மொழி மீது ஆழமான பற்று கொண்டவர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.

மாபெரும் புகழுக்குச் சொந்தக்காரரான தேவர் பெருமகனுக்கு அவரது நினைவிடமான பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில் இருந்தபோது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டது. தேவர் பெயரில் அரசுக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மதுரையில் 13 அடி உயரத்திற்குத் தேவர் சிலை அமைக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனாரின் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x