Last Updated : 30 Oct, 2020 10:33 AM

 

Published : 30 Oct 2020 10:33 AM
Last Updated : 30 Oct 2020 10:33 AM

7.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணை; தமிழக அரசு எந்த குளறுபடியும் நேராமல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

புதுச்சேரி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்துள்ள நிலையில் தமிழக அரசு எந்த குளறுபடியும் நேராமல், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (அக். 29) இரவு தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி-யுமான ரவிக்குமார், புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்த புதுவை முதல்வர் வே. நாராயணசாமியை சந்தித்து எங்களது கட்சி சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தேன்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக காத்திருந்தும் ஆளுநர் அதில் கையொப்பம் இடாமல் கிடப்பில் போட்டுவிட்டார்.

இதனிடையே ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதல்வர் துனிந்து முடிவெடுக்க வேண்டும் என விசிக கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விசிகவின் கோரிக்கை நிறைவேறியுள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறோம். அந்த அரசாணையில் தமிழக அரசு எந்த குளறுபடியும் நேராமல், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

பாஜக சார்பில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை என்ற பெயரில் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்ள மதவெறி அரசியலை தமிழகத்தில் விதைக்க திட்டம் தீட்டியுள்ளனர். டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் வேளையில், வேல் யாத்திரை மேற்கொள்வதில் சதித்திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, தமிழக அரசு விழிப்புடன் ஆய்வு செய்து, இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக டிஜிபி-க்கு விசிக சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளோம்.

பாஜகவின் போஸ்டரில் எம்ஜிஆரின் படத்தைப் போட்டு, அதிமுகவின் தலையில் கை வைக்கும் அளவுக்கு, தரம் தாழ்ந்த அரசியலை கையிலெடுத்துள்ளனர். எம்ஜிஆர் படத்தை யார் வேண்டுமானாலும் போடலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இது அதிமுகவின் அரசியலுக்கு உலை வைக்கும் சதித்திட்டமாகும். இனியும் தமிழக அதிமுக அரசு வேடிக்கை பார்த்தால், அது எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாவுக்கு செய்யும் துரோகம். சொல்லாததை சொன்னதாக திரித்து, சமூக வலைதளங்களில் தனிநபர் விமர்சனங்களை, அநாகரிகமாக செய்து வருகின்றனர். தமிழக காவல்துறையினர் அமைதியாக வேடிக்கை பார்ப்பது, தமிழகத்தின் சமூக அமைதிக்கு சீர்குலைப்பதற்கு காவல்துறையே உடந்தையாக இருக்கிறது என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

என் மீது பொய் வழக்கு போட்ட, பொய் புகார் அளித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 31 ஆம் தேதி சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 முதல் 5 வரை 3 நாட்களுக்கு மகளிர் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள உள்ளோம்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் விசிக சார்பில் மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x