Published : 29 Oct 2020 10:21 PM
Last Updated : 29 Oct 2020 10:21 PM

ஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ காயம்: விமான நிலையத்தில் அதிமுக பேனர் கிழிப்பால் பதற்றம்

மதுரை விமானநிலையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்கச் சென்ற திமுக முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் காயமடைந்தார்.

அவரை போலீஸார் தாக்கியதாக நினைத்து திமுகவினர், விமானநிலையத்தில் வைத்திருந்த சில அதிமுக பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்தார். அவர் வந்த அதே விமானத்தில் முதல்வர் கே.பழனிச்சாமியும் வந்திருந்தார்.

ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுகவினர் மதுரை விமான நிலையம் முன் திரண்டனர். அவர்கள் முண்டியடித்து ஸ்டாலினை வரவேற்க முன்னேறி சென்றபோது முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் கூட்டத்தில் சிக்கினார். அப்போது போலீஸார் கயிறு கட்டி ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கியபோது ராமகிருஷ்ணன் அந்த கயிற்றில் சிக்கி அவரது கண் கண்ணாடி உடைந்தது. இதில், அவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது.

அவரை போலீஸார்தான் தாக்கிவிட்டதாக தகவல் பரவியதால் ஆத்திரமடைந்த திமுகவினர், விமானம் பகுதியில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர்கள் சிலவற்றை கிழித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

அதன்பிறகு உண்மை நிலவரம் தெரிந்தபிறகு அவர்கள் அமைதியாகினர். காயம் அடைந்த ராமகிருஷணனை திமுகவினர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் சிறிது நேரம் விமானநிலையம் முன் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x