Published : 29 Oct 2020 10:04 PM
Last Updated : 29 Oct 2020 10:04 PM

ஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக, திமுகவினர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க, முதல்வர் கே.பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று மாலை ஒரே விமானத்தில் மதுரை வந்தனர். அவர்களை அதிமுக, திமுகவினர் ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை 30-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் கே.பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று மாலை 6.15 ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்தனர்.

ஒரே நேரத்தில் இரு முக்கிய தலைவர்கள் வந்ததால் விமானநிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வரை வரவேற்க அதிமுகவினரும், ஸ்டாலினை வரவேற்க திமுகவினரும் விமான நிலையம் முன் ஒரே நேரத்தில் திரண்டிருந்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

6.20 மணிக்கு முதலில் ஸ்டாலின் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அவரை மதுரை திமுக மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், கோ.தளபதி ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, தமிழரசி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தென் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர் சென்றப்பிறகு அரைமணி நேரம் கழித்து முதலமைச்சர் கே.பழனிசாமி 6.50 மணிக்கு வெளியே வந்தார். அவரை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், பாஸ்கரன், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, சரவணன், நீதிபதி, பெரிய புள்ளான் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகளும் முதல்வர் கே.பழனிசாமியை வரவேற்றனர்.

முதல்வர் கே.பழனிச்சாமியை விமான நிலையம் முதல் அவர் இரவு தங்கும் சின்ன சொக்கிகுளம் டிவிஎஸ் கெஸ்ட் ஹவுஸ் வரை அதிமுகவினர் வரவேற்றனர்.

பெருங்குடியில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்றனர். அவனியாபுரம் அருகே அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் அம்மா கிச்சன் பணியாளர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், ரிங் ரோட்டில் உள்ள பப்பீஸ் ஹோட்டலில் தங்கினார். இருவரும் நாளை அதிகாலை, பசும்பொன் புறப்பட்டு செல்கின்றனர்.

முதல்வர் கே.பழனிசாமிக்கு அதிமுகவினர் விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட கட்அவுட், பேனர்கள் வைத்து வரவேற்பு அளித்தனர். அதுபோல் திமுகவினரும் அதிமுகவினருக்கு போட்டியாக வழிநெடுக ஸ்டாலினை வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x