Published : 29 Oct 2020 05:23 PM
Last Updated : 29 Oct 2020 05:23 PM

வழக்கறிஞர் பிரம்மா மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஆட்சியரிடம் மனு: ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பரபரப்பு

திருநெல்வேலி 

திருநெல்வேலியில் வழக்கறிஞர் பிரம்மா மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு வழக்கறிஞர்களும் இன்று மனு அளித்தனர்.

முன்னதாக மனுவை வாங்க அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பாளையங்கோட்டையிலுள்ள மதுரம் ஹோட்டலுக்கு கடந்த 23-ம் தேதி சென்றிருந்த வழக்கறிஞர் பிரம்மா, அந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரம்மா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை காவல்துறையினர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கத்தினர் மாநகர காவல்துறை ஆணையரிடம் கடந்த இரண்டு நாட்களுக்குமுன் மனு அளித்தனர் .

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் மனு வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்குவந்து வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்துவிட்டு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x