Last Updated : 29 Oct, 2020 05:06 PM

 

Published : 29 Oct 2020 05:06 PM
Last Updated : 29 Oct 2020 05:06 PM

கூத்தன்குழியில் ரூ.5.5 கோடியில் கலங்கரை விளக்கம் திறப்பு: மத்திய அமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடற்கரை கிராமமான கூத்தன்குழியில் ரூ.5.5 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கூத்தன்குழி கிராமத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் ரூ.5.5 கோடி மதிப்பில் 45 மீட்டர் உயரத்தில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கலங்கரை விளக்கமானது 20 கடல்மைல் தொலைவில் செல்லும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் சமிக்ஞைகளை தெரிவிக்கும். மேலும் இதிலுள்ள தொழில்நுட்ப தகவல் கருவிகள் மூலம் வெளிநாட்டு கப்பல்களின் போக்குவரத்து போன்றவற்றை கண்காணிப்பு செய்கிற வசதியும் உள்ளது.

இந்த புதிய கலங்கரை விளக்கம் மூலம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீன்பிடி படகுகள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலங்கரை விளக்கத்தை இன்று காணொலி காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா திறந்து வைத்தார்.

முன்னதாக மத்திய அரசு அதிகாரி இ. மூர்த்தி வரவேற்றார். ராதாபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் இன்பதுரை தனது அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் சஞ்சீவ் ரஞ்சன், மத்திய அமைச்சர் ஆகியோர் உரையாற்றினர். கப்பல் போக்குவரத்து துறை இயக்குநர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x