Published : 29 Oct 2020 01:58 PM
Last Updated : 29 Oct 2020 01:58 PM

24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவல்:

''வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டுத் தொடரும். அவ்வப்போது ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

டிஜிபி அலுவலகம் (சென்னை) 18 செ.மீ., அண்ணா பல்கலை (சென்னை) 14 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், புழல் (திருவள்ளூர்) தலா 13 செ.மீ., சூரன்குடி (தூத்துக்குடி ) 11 செ.மீ., வைப்பார் (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 10 செ.மீ., அம்பத்தூர் (திருவள்ளூர்), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 9 செ.மீ., ஆலந்தூர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை ) தலா 8 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x