Published : 29 Oct 2020 12:21 PM
Last Updated : 29 Oct 2020 12:21 PM

இந்தியாவிலேயே முதல் மையம்; கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நவீன தீவிர சிகிச்சை மையம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

நவீன சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக். 28) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனம், கூட்டாண்மை சமூகப் பொறுப்புச் செயல்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை, கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நன்கொடையாக நிறுவியுள்ளது.

இந்த மையத்தில் 10 படுக்கைகளும், ஒரு செவிலியர் பணிப் பகுதியும் உள்ளது. இந்த மையத்தில் அவசர சிகிச்சை அளிக்கத் தேவையான பிராணவாயு இணைப்புகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் உள்ளன.

மருத்துவமனைக்குள் கோவிட்-19 சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசரப் பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம். நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மையக் கண்காணிப்பு வசதியும், புகைப்படக் கருவிகளும் உள்ளன. இத்தகைய வசதிகள் கொண்ட இந்த மையம் இந்தியாவிலேயே முதல் மையம் ஆகும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x