Published : 29 Oct 2020 06:12 AM
Last Updated : 29 Oct 2020 06:12 AM

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே புதிதாக ரூ.5 ஆயிரம் கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம்: ஒப்புதல் தர தயார் என முதல்வரிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டப் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், துறைமுகம் முதல் மதுரவாயல் வரை ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்துக்கான புதிய கருத்துரு அளித்தால் அதற்கு ஒப்புதல் அளிப்பதாக முதல்வரிடம் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, சேலம்8 வழிச்சாலை, துறைமுகம் - மதுரவாயல் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் அளித்தார். அதன்பின், பல்வேறு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

முதல்வருடனான சந்திப்பு குறித்தும் திட்டங்கள் தொடர்பாகவும், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

கடந்த முறை தமிழகம் வந்தபோது, சென்னையில் பல அடுக்கு சரக்குமுனையம் அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். சமீபத்தில், இந்த திட்டத்துக்கு நிலம் அளிக்க ஒப்புதல் தந்த தமிழக அரசு, சென்னை அருகில் உள்ள சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு சொந்தமான நிலத்தை தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சரக்கு முனைய திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த திட்டத்துக்கான ஒத்துழைப்பை தந்ததற்காக தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளை 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை மாநில அரசு அளித்துள்ளது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை 45-ல் கூடுவாஞ்சேரி முதல் செட்டிப்புண்ணியம் வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலை 4-ல் மதுரவாயல் முதல் பெரும்புதூர் வரையிலான நெடுஞ்சாலையையும் விரிவாக்கம் செய்ய கோரியுள்ளது. இதற்கான திட்ட மதிப்புத் தொகை ரூ.700 கோடியாகும்.

இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று மாநில அரசுக்கு உறுதி அளித்துள்ளேன். திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி வைக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தீர்த்து ஒப்படைப்பதாக மாநில அரசும் தெரிவித்துள்ளது.

மேலும், தஞ்சை முதல் பெரம்பலூர் அடுத்த ஆத்தூர் வரையிலான தேசியநெடுஞ்சாலை 136 உள்ளிட்ட இரண்டுதேசிய நெடுஞ்சாலைகளை தமிழக பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதில் எங்களுக்கு எந்தஆட்சேபணையும் இல்லை. அவற்றை மாநில அரசுக்கு மாற்றித்தர முடிவெடுத்துள்ளோம்.

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித்தர முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையின் மிக முக்கிய திட்டமான துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டம் முதலில் 4 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன்மூலம்வாகன நெரிசல் அதிகரிக்கும் என்று தமிழக முதல்வர், தலைமைச் செயலர்ஆகியோர் தெரிவித்திருந்தனர். இத்திட்டத்துக்கான மொத்த செலவினம் ரூ.3,100 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்துக்கான புதிய கருத்துரு அளிக்கும்படி முதல்வரிடம் தெரிவித்துள்ளளேன். இந்த மேம்பாலத் திட்டத்துக்கான புதிய வடிவமைப்பை வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கலாம் என்றும், இரண்டு அடுக்கு மேம்பாலமாக அமையும் வகையிலும், முதலில் 4 வழி, அதன்பின் 6 வழி தொடர்ந்து 8 வழியாக மாற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன்.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, அடுத்த 20 ஆண்டுகளில் சென்னையின் வாகன நெரிசல் பிரச்சினை வெகுவாக குறைந்துவிடும். புதிய கருத்துருவின்படி திட்ட மதிப்பீடு ரூ.5 ஆயிரம் கோடியாக உயரக்கூடும். இந்த மேம்பாலத்துக்கான நிலம் கையகப்படுத்துவதற்கு50 சதவீத தொகையை துறைமுக நிர்வாகமும், மீதமுள்ள 50 சதவீதத்தைதமிழகஅரசும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளன.

தற்போது, திட்டத்தொகை ரூ.3,500 கோடியில் இருந்து 5 ஆயிரம் கோடியாக உயர்வதால், அதை சமாளிக்க சிலயோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளேன்.

இந்த மேம்பாலத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிமென்ட், இரும்புக்கான ஜிஎஸ்டி வரி, மணல் மற்றும் மொத்த மதிப்பீட்டுக்கான ராயல்டி ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இதன்மூலம் மாநில அரசுக்கு இழப்பு இருந்தாலும், ரூ.500 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் சேமிக்கப்படும். மேலும், இதில் தேவைப்படும் மீதி தொகையான ரூ.1,000 கோடியைமத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சரிடம் பேசி விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளேன். அதேநேரம், சர்வதேச தரத்தில், பல வசதிகளுடன் உருவாக உள்ள இந்த திட்டமானது பொதுமக்களுக்கும், கண்டெய்னர் போக்குவரத்துக்கும் உகந்த வகையில் திட்டமிட வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x