2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

அடுத்தாண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யக்கோரி தாக்கலான மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலக்காலை சேர்ந்த தவமணி தேவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும், மத்திய சமூக நீதித்துறையும் 2001-ல் ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கெடுக்க பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பின்பற்றப்படவில்லை. ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யும் போது இடஒதுக்கீடு சலுகை வழங்குவது சுலபமாக இருக்கும்.

அடுத்தாண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்வது போல் ஓபிசி பிரிவினரையும் தனியாக கணக்கீடு செய்ய வேண்டும் என அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு மனு அளித்துள்ளது. இதுவரை அதற்கு மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

கரோவா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடும் முன்பு, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை தனியே கணக்கீடு செய்ய பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்வது தொடர்பாக 1992-ல் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனி கணக்கீடு செய்ய என்ன தயக்கம்? தனி கணக்கீடு செய்தால் தான் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 18-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in