Published : 28 Oct 2020 02:22 PM
Last Updated : 28 Oct 2020 02:22 PM

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது; எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு?- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக். 28) வெளியிட்டுள்ள தகவல்:

"இன்று, (அக். 28) தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

மதுரை மாவட்டம் மேலூர் ஏ.ஆர்.ஜி. 6, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தலா 5, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் 4, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் 3, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மதுரை மாவட்டம் மேலூர், தேனி மாவட்டம் வீரபாண்டி தலா 2".

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x