Published : 28 Oct 2020 12:54 PM
Last Updated : 28 Oct 2020 12:54 PM

அக். 31-ம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கு; அடுத்தகட்டத் தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் 9-ம் கட்ட ஊரடங்கு அக். 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மார்ச் மாத இறுதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தொழில்கள், உணவகங்கள் என அனைத்து மட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு கட்ட ஊரடங்கின்போதும் மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. அக்.1 முதல் தற்போது வரை செயல்பாட்டில் உள்ள 9-ம் கட்ட ஊரடங்கில் தொழில்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்த ஊரடங்கு அக். 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்டத் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து, இன்று (அக். 28) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலிக் காட்சி மூலமாக இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு, மருத்துவமனை படுக்கைகள், மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று பிற்பகலில் மருத்துவக்குழு நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, அடுத்தகட்டத் தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகள் திறப்பு, பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x