Published : 28 Oct 2020 12:21 PM
Last Updated : 28 Oct 2020 12:21 PM

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்; முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சட்டப்படிப்பினை முடித்துக் கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும்.

கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்துவிட்டு அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இந்நிலையில், பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்குச் சென்று விடும் நிலையும் உள்ளது.

இச்சூழலில், தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு திட்டத்தை கடந்த ஜூலை 2-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், இத்திட்டத்தை இன்று (அக். 28) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து, இளம் வழக்கறிஞர்களுக்கு 3,000 ரூபாய் உதவித்தொகையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x