Published : 28 Oct 2020 06:51 AM
Last Updated : 28 Oct 2020 06:51 AM

ஓய்வூதியரின் வீட்டுக்கே சென்று ஆயுள் சான்று: அஞ்சல் துறை புதிய வசதி அறிமுகம்

ஓய்வூதியர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை, வீடுகளுக்கே சென்று வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்து உள்ளது.

ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசு கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். வங்கிகள், பொதுசேவை மையங்களில் இந்த மின்னணு சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், மிகவும் வயதானவர்கள், மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாததால், அவர்களால் ஓய்வூதியம் பெற முடியவில்லை.

இதற்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தில், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலமாக, மின்னணு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் மின்னணு உயிர்வாழ் சான்று கிடைக்கும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படும்.

தபால்காரரிடம் இந்த சான்றை பெற முடியாதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x