Published : 28 Oct 2020 06:48 AM
Last Updated : 28 Oct 2020 06:48 AM

உள்ளாவூரில் தடுப்பணை அமைக்கக் கோரி நடைபயணம்: பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் உட்பட 100 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தி கோட்டையை நோக்கிநடைபயணம் செல்ல முயன்றபாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்த 100 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த 7 இடங்களில் உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை அமைக்கும் இடம் குறித்து ஆய்வு செய்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் குழுவினர் உள்ளாவூர் தடுப்பணையை அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய சீவரத்தில் அமைக்க அனுமதி அளித்தனர். இந்த இடம்தான் தடுப்பணை அமைக்க உகந்த இடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் தடுப்பணைக்கான பணிகள் தொடங்கியதும் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் இவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பழைய சீவரம் பகுதியில் தடுப்பணை அமைக்க ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டு, பணிகளை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில் தடுப்பணை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கோட்டையை நோக்கிநடைபயணம் அறிவித்திருந்தனர். அதன்படி திருமுக்கூடல் பகுதியில் இருந்து அவர்கள் நடைபயணம் தொடங்கும் முன்பேபாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் உட்பட 100 பேரை சாலவாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x