Published : 27 Oct 2020 04:50 PM
Last Updated : 27 Oct 2020 04:50 PM

வளிமண்டலச் சுழற்சி; 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலச் சுழற்சி காரணமாக 4 தென்மாவட்டங்களின் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்காலில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும்.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

ராஜபாளையம் (விருதுநகர் ) 8 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), உத்தமபாளையம் (தேனி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 4 செ.மீ., வீரபாண்டி (தேனி), கோவிலான்குளம் (விருதுநகர்), பிளவக்கல் ( விருதுநகர்), மேல் பவானி (நீலகிரி) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x