Published : 27 Oct 2020 02:30 PM
Last Updated : 27 Oct 2020 02:30 PM

இலங்கை கடற்படையினர் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர் காயம்- கற்கள், பாட்டில்களைக் கொண்டு தாக்கியதாகக் குமுறல்

காயமடைந்த மீனவர் சுரேஷ்.

ராமேசுவரம்

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவர் ஒருவர் காயமடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 580-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதில் பூண்டி ராஜன் என்பவருக்குs சொந்தமான விசைப்படகில் 6 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் தலைமன்னார் அருகே திங்கட்கிழமை நள்ளிரவு வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் படகிலிருந்த சுரேஷ் (38) என்பவர் காயமடைந்தார்.

பின்னர் அவர்கள் அவசரமாக படகை கரைக்கு திருப்பினர்.

செவ்வாய்கிழமை அதிகாலை மீனவர்கள் ராமேசுவரத்திற்கு கரை திரும்பியதும் சுரேஷை சக மீனவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காயம்மடைந்த மீனவருக்கு 3 தையல்கள் போடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகை முதலில் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுரேஷ் காயமடைந்தார். உடனே உயிருக்குப் பயந்து கரை திரும்பிவிட்டோம்" என்றனர்.

இதற்கிடையில், ராமேசுவரம் மீனவர் மீதான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x