Published : 27 Oct 2020 06:53 AM
Last Updated : 27 Oct 2020 06:53 AM

காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் தடுப்பணை கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள தடுப்பணை கட்டும் பணிகள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பணை கட்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்ட தமிழக அரசு ரூ.43 கோடி நிதி ஒதுக்கியது. இதற்காக உள்ளாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த பொதுப்பணித் துறையின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி அளிக்கும் குழுவினர் பழைய சீவரம் பகுதியில் தடுப்பணை கட்ட தேர்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த தடுப்பணைக்கு பூஜை போடப்பட்டது. தடுப்பணை கட்டும் பணி தொடங்கியதும், இதற்கு பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

பின்னர், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர்கள் தடுப்பணை கேட்கும் இடம் பள்ளமான பகுதியாக இருப்பதால் இதற்கு 3 மடங்கு செலவு ஆகும் என்றும், அருகில் பாலூரில் மற்றொரு தடுப்பணை அமைய இருப்பதால் உள்ளாவூரில் தடுப்பணை அமைய சாத்தியமில்லை என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதை ஆய்வு செய்த ஆட்சியர் 2 தினங்களுக்கு முன் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூட்டத்தை கூட்டினார். அப்போது பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் அந்தக் கூட்டத்தை புறக்கணித்தது. அதில் பங்கேற்ற விவசாயிகள் ஏதாவது ஓர் இடத்தில் தடுப்பணை அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பாலாற்றில் ஏற்கெனவே நடைபெற்ற இடத்தில் தடுப்பணை அமைக்கும் பணிகளை தொடங்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத் தடுக்க முயன்றால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து பாலாற்றில் ஏற்கெனவே தொடங்கிய பழைய சீவரம் பகுதியிலேயே தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்தப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x