கருத்து சுதந்திரம் காக்க சாகித்ய அகாடமி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: 16 தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

கருத்து சுதந்திரம் காக்க சாகித்ய அகாடமி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: 16 தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை
Updated on
1 min read

கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க சாகித்ய அகாடமி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற 16 தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோக மித்திரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, நாஞ் சில் நாடன், சு.வெங்கடேசன், டி.செல்வராஜ், பூமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதச்சார்பற்ற, ஜனநாயக, சோஷலிச குடியரசான நம் நாட்டின் அடிப்படை விழுமியங் களும், பன்முகத் தன்மையும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறது. இது குறித்து எங்களது அச்சத்தையும், கவலையையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். இந்தப் படுகொலைக்கு எதிராக நாடெங்கும் வலுவான கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், சாகித்ய அகாடமி நேரடியான வார்த்தைகளில் இதனை கண்டிக்க முன்வராததும், எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்து திட்டவட்டமான தீர்மானத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தராததும் வருத்தம் அளிக்கிறது.

எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடுவது ஒருபுறம் இருக்க, அவர்களின் உயிருக்கே உத்தரவாதமற்ற நிலை உருவாகியுள்ளது. இச்சூழலில் பொதுவான அறிக்கையுடன் அகாடமி நிற்பது போதாது என்று கருதுகிறோம். கருத்துச் சுதந்திரத் தைப் பாதுகாக்க இன்னும் உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்துகிறோம்.

பன்முகப் பண்பாடுகளின் வண்ணக்கலவைதான் இந்தியா வின் ஆதார சுருதி. விதவிதமான வழிபாட்டு, உணவு முறைகளும், நம்பிக்கைகளும், பகுத்தறிவுச் சிந்தனைப் போக்குகளும் கலந்து நடப்பதே இந்திய வாழ்வின் வரலாற்றுப் பாதை.

ஆனால், மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும் தொடர்கிறது. மக்களின் பன்முக பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துக்களையும் வன்முறையால் எதிர்கொள்வதும் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இதனை கண்டிக்கிறோம். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in