Last Updated : 26 Oct, 2020 05:45 PM

 

Published : 26 Oct 2020 05:45 PM
Last Updated : 26 Oct 2020 05:45 PM

பில்லூர் அணைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பழங்குடியின மக்கள் அவதி; மருத்துவத் தேவைக்காக கர்ப்பிணிகள் வாடகை ஜீப்பில் பயணிக்கும் பரிதாபம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

பில்லூர் அணைப் பகுதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் அனைத்து அவசரத் தேவைகளுக்கும் வாடகை ஜீப்பில் பயணிக்கும் நிலைக்குப் பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கரோனா கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, செப்டம்பர் 7-ம் தேதி முதல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணைப் பகுதிக்கு இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பில்லூர் அணை மற்றும் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக பில்லூர், கொடியூர் பகுதியைச் சேர்ந்த எம்.மல்லன் கூறுகையில், "மளிகைப் பொருட்கள் தவிர மற்ற அனைத்துத் தேவைகளுக்கும் நாங்கள் வெள்ளியங்காடு, காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தாக வேண்டிய நிலையில் உள்ளோம். குண்டூர், கெத்தைகாடு, முள்ளி, கோரப்பதி, பரளிக்காடு, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்துக்காக அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளோம்.

கரோனாவுக்கு முன்புவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து 2 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அனைத்துப் பகுதிகளுக்கும் இயக்கப்பட்டபோதே எங்கள் பகுதிக்கும் பேருந்துகளை இயக்குவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், இதுவரை இயக்கவில்லை. இதனால், அவசரத் தேவைக்காக வாடகை ஜீப்களை நாட வேண்டியுள்ளது.

அதிக வாடகை

பில்லூரிலிருந்து முள்ளி செல்ல ஜீப்பில் ஒரு நபருக்கு 600 ரூபாய் கேட்கின்றனர். அதே தூரம் பேருந்தில் பயணித்தால் 7 ரூபாய் மட்டுமே செலவாகும். அவசரத் தேவைக்கு மேட்டுப்பாளையம் செல்ல வேண்டுமெனில் 2,000 ரூபாய் வரை கேட்கின்றனர். இதனால், நோய்வாய்ப்பட்டவர்கள் மருந்துகள் வாங்கிச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளாக உள்ளவர்களை அவ்வப்போது பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் அனைவரும் வாடகை ஜீப்பில் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டு சான்று வாங்கவும், தங்களுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்களை வாங்கவும் ஜீப்பையே நாட வேண்டியுள்ளது. யானைகள் நடமாட்டம் இருப்பதால் நடந்தும் செல்ல முடியாது. எனவே, கோவை காந்திபுரத்தில் இருந்து இயக்கப்படும் ஒரு பேருந்தையாவது இயக்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பேருந்துகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்தை நம்பி மக்கள் உள்ளதால், அவர்களின் தேவை கருதி வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பில்லூருக்குப் பேருந்தை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x