Published : 26 Oct 2020 05:35 PM
Last Updated : 26 Oct 2020 05:35 PM
ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் காலியாக உள்ளதால், தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறைக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்று (அக். 26) புதிதாக 144 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 189 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 34 ஆயிரத்து 336 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,579 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 29 ஆயிரத்து 990 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2 ஆயிரத்து 179 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் புதுவை மாநிலத்தில் தற்போது 3,758 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 588 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று கரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:
"புதுவை மக்கள்தொகையில் 20 சதவீதத்தினருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையை ஓரிரு நாளில் எட்டுவோம்.
கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தற்போது 3 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல் மருத்துவக் கல்லூரிக்குக் கரோனா நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளேன். ஏனென்றால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் நிறைய படுக்கைகள் காலியாக உள்ளன.
அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சினை உள்ளதா என சுகாதாரக் குழு வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து என்னிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளேன். யாருக்கு உடல்நிலை சரியில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது கரோனா இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். இது சரியில்லை. தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT