Last Updated : 25 Oct, 2020 05:05 PM

 

Published : 25 Oct 2020 05:05 PM
Last Updated : 25 Oct 2020 05:05 PM

கரிகாலன் சிலை முன்பாக நூல் அறிமுகம்

ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய வரலாற்று நாவலான கரிகாலன் சபதம் எனும் நூலின் அறிமுக விழா நாகை மாவட்டம் பூம்புகாரில் உள்ள கரிகாலன் சிலை முன்பு இன்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிபவர் ஆதலையூர் சூரியகுமார். வரலாற்றின் மேல் இவருக்கு உள்ள ஆர்வத்தால் கரிகாலன் வரலாற்றை தன் சுய முயற்சியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் கிடைத்த அரிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றை கரிகாலன் சபதம் என் வரலாற்று நாவலாக எழுதியிருக்கிறார்.

26 அத்தியாயங்களையும் 600 பக்கங்களையும் கொண்ட இந்த நாவலை கடந்த மாதம் கரிகாலன் கட்டிய கல்லணையில் உள்ள அவரது சிலை முன்பாக வெளியிட்டார்.அதனை அடுத்து இந்த நூலின் அறிமுகவிழா கரிகாலனின் இரண்டாவது தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தில் அதாவது தற்போதைய பூம்புகாரில் உள்ள கரிகாலன் சிலை முன்பாக இன்று இன்று நடைபெற்றது.

அறம்செய் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற அறிமுக விழாவில் புத்தக ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் வெளியிட, அறம் செய் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் நூலைப் பற்றிய அறிமுகம் நடைபெற்றது. அறக்கட்டளை செயலாளர் கணேசன் அறிமுக உரையாற்றினார்.

ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், துணைத் தலைவர் சங்கர் உட்பட பலரும் எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பூம்புகார் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்து தமிழ் இணையதள பிரிவிடம் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்ததாவது.., "மன்னன் கரிகாலன் ஒரு மன்னனாக மட்டுமில்லாமல் மக்கள் தலைவனாக வாழ்ந்திருக்கிறான். கல்லணையை கட்டியது மட்டுமல்லாமல் பல கால்வாய்களையும் வெட்டி காவிரி டெல்டாவில் விவசாயத்தை கட்டமைத்தவர் கரிகாலன்.

காவிரிக்கரையில் நாகரீகத்தை திட்டமிட்டு வளர்த்தெடுத்தவனும் அவன் தான். அவனது வாழ்க்கை வரலாற்றில் பல அதிசயக்கத்தக்க சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இவற்றை எல்லாம் தொகுத்துத்தான் இந்த கரிகாலன் சபதம் எனும் வரலாற்று நூலை எழுதி இருக்கிறேன். கரிகாலன் காலடி பட்ட இடமெல்லாம் அந்த நூலைப் பற்றிய தகவல்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

அதனால்தான் கல்லணையில் அந்த நூலை வெளியிட்டு தற்போது காவிரி கடலில் கலப்பதுவும், கரிகாலனின் இரண்டாவது தலைநகரமானதுமான பூம்புகாரில் இந்த நூலை இன்றைக்கு அறிமுகம் செய்திருக்கிறோம். மேலும் கரிகாலன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த நூல் அறிமுக விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார் ஆதலையூர் சூரியகுமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x