Published : 25 Oct 2020 12:32 PM
Last Updated : 25 Oct 2020 12:32 PM

கரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்த செவிலியர் மகளுக்கு அரசுப்பணி: 4 வாரத்தில் அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் கரோனா சிகிச்சைப் பணியில் கரோனா பாதித்து உயிரிழந்தார். அரசு அறிவித்தப்படி தனது மகளுக்கு அரசுப்பணி அளிக்கவேண்டும் என செவிலியரின் கணவர் தாக்கல் செய்த வழக்கில் 4 வாரத்தில் வேலை வழங்க அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. கரோனா சிகிச்சைப் பணியில் முன் கள பணியாளராக ஈடுபட்ட அவர், கடந்த ஜூன் மாதம் கரோனா பாதித்து உயிரிழந்தார்.

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே காப்பீட்டு நிறுவனம் மூலம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று விட்டதாகவும், சட்டம் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள தனது இளைய மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x